- EYE DONATION
Courtesy: K. Thyagarajan, Chennai
Making way for EYE Donation after....?
என்ன செய்யலாம் ஆக்கபூர்வமாக ?
நமது மறைவிற்குப் பின்னரும் இவ்வுலகை நாம் பார்த்து ரசிக்க வேண்டுமா?
ஆம் எனில்..
உங்கள் கண்களை தானம் செய்யுங்கள்
இப்படி பலவிதமான விளம்பரங்களை நாம் பார்த்திருக்கிறோம்.
திரைப்பட நட்சத்திரங்களும்,அரசியல் பிரபலங்களும் கண் தானத்தின் முக்கியத்துவத்தை நமக்கு பல்வேறு ஊடகங்களின் வழியே சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆக.... இந்த காலத்தில் அநேகமாக எல்லாருக்குமே கண் தானம் பற்றி ஓரளவு தெரிந்திருக்கிறது. பொது விழாக்களில் நிறைய பேர் கண் தானம் செய்வதாக உறுதிமொழியும் தருகிறார்கள் - நிறைய பேருக்கு உண்மையாகவே இதில் ஈடுபாடு இருக்கிறது. ஆனால் எதுவுமே நடைமுறையில் சாத்தியமாவது இல்லை – ஏன் ?
இதைப்பற்றி சிறிது விரிவாக யோசித்தால் காரணங்கள் தெளிவாகும்.
கண் தானம் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் அதை செயல்படுத்தக்கூடிய தருணம் வரும்போது – அதை செயல்படுத்தக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை ! ஆம் அவர்கள் உயிருடன் இருந்தால் தானே தங்கள் விருப்பத்தை செயல்படுத்த முடியும் ? அவர்களின் விருப்பத்தை செயல்படுத்தக்கூடிய நிலையில் உள்ள நெருங்கிய உறவினர்கள் ஏன் அதைச் செய்வதில்லை?
காரணங்களில் முக்கியமாக தெரிபவை -
1) இறந்து போனவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இறந்தவரின் விருப்பம் தெரிந்திருப்பதில்லை.
2) ஒரு வேளை தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி யோசிக்கக்கூடிய மன நிலையில் அவர்கள் இல்லை. இழப்பு அவர்கள் மனநிலையை பெரிதும் பாதித்திருக்கும்.
3) அருகில் இருப்பவர்கள் அடுத்த காரியம் எப்போது என்பதிலேயே அவசரம் காட்டுவார்கள். அநாவசிய தாமதங்களை தவிர்க்கவே இத்தருணங்களில் விரும்புவார்கள்.
எனவே பார்வையற்றோர் நிறையபேர் பார்வை பெறக்கூடிய சந்தர்ப்பஙகள் வீணாகின்றன.
மரணமடைந்தவர்களின் கண்களை ஆறு மணி நேரத்திற்குள், அருகில் உள்ள கண் மருத்துவமனை வங்கிக்கு சேரும்படி செய்து விட்டால் போதும்… இறந்தவர் கண்கள் இரண்டு பேருக்கு பொருத்தப்பட்டு பார்வை பெறுவர். இதற்கு தேவை மனப்பக்குவம் மட்டுமே. இறந்தவர்களின் உறவினர் சம்மதம் பெற்றே கண் தானம் செய்ய முடியும். ஆகவே, உறவுக்காரர்களிடம் கண் தானத்தின் மகத்துவத்தை விளக்கி, கண் தானம் செய்ய சம்மதம் பெறவேண்டும். சம்மதம் கிடைத்ததும், அருகில் உள்ள கண் மருத்துவமனைக்கு, போன் செய்தால் போதும். மருத்துவமனையில் இருந்து சம்பந்தபட்டவர்களே நேரில் வந்து, கண்களை எடுத்துச்சென்று விடுவர். ஒரு வயது நிரம்பிய குழந்தை முதல், எவ்வளவு வயதானவராக இருந்தாலும், அவரது கண்கள் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும். கண்களை எடுத்தபின் இமைகளை மூடி தைத்து விடுவதால், முகம் விகாரமாக தோன்றாது.
அனைத்து ஜாதி, மதங்களும் கண் தானத்தை உயர்வான காரியமாகவே கருதுவதால், இது எந்த மத சம்பிரதாயத்திற்கும் எதிரானதல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இறந்த பிறகு, மண்ணால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்பட்டோ, எவ்வித பலனும் இல்லாமல் போகக்கூடிய இறந்தவரின் கண்கள் தானமாகக் கிடைத்தால், இருவர் கண்கள் ஒளி பெறுவதுடன், மூலம், இறந்த பிறகும் இவர்கள் மூலம் வாழ்கின்றனர் என்றே சொல்லலாம்.
அந்த வகையில், நம் மனதில் மனிதநேயம் நிறைந்து இருக்கும் பட்சத்தில், குடும்ப உறுப்பினர்களிடம், “நான் இறந்தால், என் கண்களை தானமாக கொடுத்து விடுங்கள்… அப்போதுதான் என் ஆன்மா சாந்தியடையும்!’ என்று சொல்லி வையுங்கள். அது ஒன்றே நிச்சய பலன் தரும். மற்றபடி, இறந்தவர்களின் வீடுகளில் இருப்பவர்களிடம் பேசி, கண்களை தானமாக பெறும் முயற்சியில் இறங்க வேண்டும். இந்த முயற்சி பலன் தந்தால், இரண்டு பேர் பார்வை பெறுவர் என்பதை எண்ணும் போது, அதற்காக எத்தகைய மான, அவமானங்களையும் பொறுத்துக் கொள்ளலாம்.
சரியாக சொல்வதானால் கண்களை தானமாக அளிப்பதன் மூலம், வாழும் வாழ்க்கை மட்டுமல்ல… வாழ்ந்த பிறகு கிடைக்கும் மரணம் கூட அர்த்தமுள்ளாதாகும். ***
with warm Regards,
K.Thiagarajan,
Designed and maintained by AKR Consultants

